ஆண்டாண்டு காலமாகவே மன்னர் ஆட்சியிக்கும் முன்னரே இருந்து பண்ணை அடிமை முறை வரை பரவலாக இருந்தாலும் இன்றளவும் இதன் மீட்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
எ(வ)சமான விசுவாசம்.!!
ஒரு சின்ன மளிகை கடையிலும் தேநீர் கடையிலோ வேலை செய்யும் நபர்களாக இருந்தாலும் சரி பெரிய பெரிய மல்டிநேஷனல் கம்பெனிகளில் வேலை செய்யும் நபர்களாக இருந்தாலும் சரி,
தன் பொறுப்பு, தன் பதவி, தனக்கான வேலை, நிறுவனத்திற்கான செயல்பாடுகள், வாங்குகிற சம்பளம், இவற்றையெல்லாம் கடந்து எங்க முதலாளி எங்க ஓனர் என்ற அபரிமித நம்பிக்கையோடு உள்ள விசுவாசம் பெரும்பாலும் பலரிடத்தில் உண்டு.
வேலை செய்பவர்கள் இப்படி விசுவாச வீரர்களாக இருந்தாலும் முதலாளிகளின் கண்ணோட்டத்தில் எல்லோருமே வேலையாட்கள் தான். இதில் பதவி சம்பள வேறுபாடுகள் எல்லாம் கடந்து வேலையாட்கள் என்பவர்கள் வேலையாட்கள் தான்.
அரிதாக சில முதலாளிகள் ஒரு சில நன்மைகளை தொடர்ந்து தங்கள் வேலையாட்களுக்கு செய்து வருவதும் இங்கு மறக்க முடியாத ஒன்று தான் மறுக்க முடியாத ஒன்றுதான்.
மற்றபடி,
ஒருவரை வேலைக்கு அமர்த்துகிறோம் என்றால் அவருக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு அவரை எப்படி வேலை வாங்கலாம் என்ன சொல்லி வேலை வாங்கலாம் பாராட்டி வேலை வாங்குவது அல்லது முகஸ்துதி பாடி வேலை வாங்குவது அல்லது அரிதாக சிலர் நேர்மையாக அவர்களை மதிப்பீடு செய்து வேலை வாங்குவது என்று முதலாளிகள் தங்கள் முதலாளிகளின் நுணுக்கங்களை சரியாகவே செய்து வருகிறார்கள்.
நான் இதற்கு முன்பாக பணி செய்யும் நிறுவனத்திலும் எங்களுக்கு எஜமான விசுவாசம் மிக அதிகமாக இருந்தது. அவரது நல்ல நடவடிக்கைகள் ஊழியர்களோடு இயல்பாக பழகுவது நம்மை போல் ஒருவராக இருந்து முதலாளியாக உயர்ந்தது என்று நல்ல மதிப்பெண்கள் அவர் மீது இருந்ததால் அந்த விசுவாசம் எங்களுக்குள் பெருகிற்று.
ஆனால் அவரது சில தவறான செயல்பாடுகளால் தனது தனிப்பட்ட சில தவறான முடிவுகளால் கம்பெனி நிலைகுலைந்து எங்களது சம்பளங்கள் எல்லாம் தராமல் இழுத்தடிப்பு செய்யும் பொழுது நாம் கம்பெனிக்கு அதன் வளர்ச்சிக்கு இவ்வளவு விசுவாச வீரர்களாக இருந்தாலும் அவரது பிரச்சினைகளை எல்லாம் பகுதி பகுதியாக பிரித்து நம் தலையில் சுமத்திவிட்டார், நம் சம்பளத்தை அபகரித்து வைத்துள்ளார் என்று ஆதங்கமும் கோபமும் பலருக்கு இன்னும் உண்டு. தொடர்கதை ஆகி விட்டது பலருக்கு. பலர் வேறு வேறு வேலைகளுக்கு சென்று இதையெல்லாம் மறந்தே விட்டார்கள்.
அது ஒரு பக்கம் இருக்கட்டும்.!
சிலர் எஜமான விசுவாசம் மேலோங்கி தனக்கு கீழ் செய்யும் பணியாள்களுக்கு ஊதிய உயர்வுக்கு கூட பரிந்துரை செய்ய மாட்டார்கள் கம்பெனிக்கு மிச்சம் பிடித்து தருகிறோம் என்ற பேர்வழிகளாக. இவங்களுக்கெல்லாம் எதுக்குங்க இவ்வளவு சம்பளம் உயர்வு இதுவே போதும் என்று அந்த பரிந்துரை பட்டியலிலும் கை வைத்து விடுவார்கள்.!
முன்னொரு நாளில்....
எனது சம்பள பிரச்சனைகளை எனது சீனியர் நண்பரிடம் கூறி பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் ஒரு முறை இவ்வாறு கூறினார்.....
அவர் ஆரம்ப நாட்களில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணி செய்யும் பொழுது அவருக்கு சம்பளம் தாமதமாக வந்தது அதுவும் ஒரு மாத தாமதம் தான்.
வாராவாரம் வேலை ஆட்களுக்கு வார சம்பளம் கொடுக்கும் பொறுப்பும் இவருடையது தான். எல்லோருக்கும் வாராவாரம் சரியாக பணத்தை கம்பெனி சொல்வது போல கொடுத்து விடுகிறோம், ஆனால் நம் சம்பளம் ஒரு மாதம் தாமதம் ஆகிறது என்று வருந்தியவர் திடீரென யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுத்தார்.
ஆம் அடுத்த வாரம் வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது தனக்கான சம்பளத்தை அதிலிருந்து எடுத்துக்கொண்டு வவுச்சர் போட்டு ஓனருக்கு அனுப்பி விட்டார்.
இது சற்றும் எதிர்பார்க்காத நிர்வாகம் தூக்கி வாரி போட்டது போல அய்யய்யோ இது என்ன இப்படி செய்துவிட்டார் இது பலருக்கு முன் உதாரணமாக ஆகிவிட்டால் என்ன செய்வது என்று அம்மாத்ததிலிருந்து காலாகாலத்திற்கு சம்பளத்தை சரியாக போட்டார்களாம்.
விஷயம் என்னவென்றால்...
நிறுவனம் என்பது நிறுவனம். உங்கள் வேலை என்பது உங்கள் வேலை. உங்களுக்கான சம்பளம் என்பது உங்களுக்கான சம்பளம். எஜமான் என்பவர் எஜமான் தான்..!
இது எல்லாம் தாண்டி எனக்கு படி அளக்கிறவர் என்று ஆண்டான் அடிமை முறைக்குள் போய் விடுவது தான் அதீத விசுவாசத்தினால் ஏற்படும் பிழை.
இந்த காலத்தில் வேலை கிடைப்பது குதிரை கொம்பாகத்தான் இருக்கிறது.
அதிலும் நல்ல நிறுவனங்களில் வேலை கிடைப்பது என்பது அரிது இதுதான்.
ஆனால் நாம் எந்த வேலை செய்தாலும் அது நமக்கான வேலை அதற்கான சம்பளம் இது எல்லாம் கடந்த எஜமான விசுவாசம் எனும் உறவு தேவையற்றது.
நம்மால் ஒரு நிறுவனத்தை மாற்றிக் கொள்வது எந்த அளவிற்கு கடினமாக இருக்கிறதோ அதுபோல கம்பெனி முதலாளிகள் தங்களது வேலையாட்களை மாற்றிக் கொள்வது அவ்வளவு கடினமில்லை ஒரே நாளில் மாற்றிவிட அவர்களால் முடியும் என்பதையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். என்னதான் மாங்கு மாங்கு என்று விழுந்து விழுந்து வேலை பார்த்தாலும் 99% முதலாளிகளுக்கு எல்லோருமே கூலி ஆட்கள் தான். அவர்களை வைத்து தங்களை தங்கள் நிறுவனத்தை எப்படி உயர்த்திக் கொள்ளலாம் என்று தான் கருதுவார்கள், சிந்திப்பார்கள். ஏனென்றால் அதுதான் அவர்கள் பிரதான பணி.! அதனால்தான் அவர்கள் முதலாளி.!!
அதைத் தாண்டி நான் கம்பெனியை உயர்த்துகிறேன் என்று நாம் எடுக்கும் முயற்சிகளை விட இன்னொரு விசுவாச வீரர் அங்கு நுழைந்தார் என்றால் நம்மை புறந்தள்ளிவிட்டு அவரை வைத்து வண்டியை ஓட்ட ஆரம்பித்து விடுவார்கள் என்பதையும் எண்ணித் பார்த்தல் நலம்.!
கில்லிக்கு கில்லி டில்லியிலும் உண்டு.!
நாம் பார்க்கும் வேலைக்கு உண்மையாக நேர்மையாக கருத்தாக நம் திருப்தியோடு வேலை பார்ப்பது நல்லது.
அந்த அறம் உங்கள் வாழ்க்கைக்கும் பயனுள்ளதா அமையும் உங்களையும் ஒரு நல்ல முதலாளியாக உயர்த்தவும் கூடும்.!
அன்று தொழிலாளிகளை சரியாக நடத்தினாலே உங்களது வாழ்வின் வெற்றி வசப்படும்.!!
அன்புடன்
🌸 பூங்குன்றன்
கருத்துகள்
கருத்துரையிடுக