திருமண வாழ்க்கை கடினமானால் பிரிந்துவிடுவது சிறந்ததா..?
"இல்லம்மா.. இனியும் நீ அந்த கொடுமைக்காரன் கிட்ட கஷ்ட்டப்பட்டு வாழ வேண்டாம், பிரிந்து வந்திடு, விவாகரத்து வாங்கிட்டு உன் வழியை பார்த்துகிட்டு போயிடு"
"இப்படி ஒருத்திகூட நீ இனிமேல் குடும்பம் நடத்தினால், உன்னையும் கொன்னுட்டு பிள்ளைகளையும் கொன்னுட்டு போயிடுவா அவ, இந்த பாவி சிறுக்கியோட இனி வாழ்க்கை என்ன, விவாகரத்து வாங்கிட்டு அடுத்து என்னன்னு பாரு"
ஒரு ஆணோ, பெண்ணோ... அவரது குடும்பம், உறவுகள், நட்புகள் எல்லோரிடமும் அன்பானவன்/ அன்பானவள், கண்ணியம் மிக்கவள்/ மிக்கவன், நல்ல குணமுள்ளவர்கள், பொறுப்புள்ளவர்கள் என மிக நல்ல பெயர் எடுக்கிறார்கள், அதே வேளையில் தனது கணவன் அல்லது மனைவியிடம் சிலரோ மிக வெறுப்பான நிலையை சம்பாதிக்கிறார்கள்.
எப்படி இது உண்டாகிறது? எல்லோருக்கும் நல்லவராக, குணவான்களாக, குணவதிகளாக இருக்கும் ஒருவர் திருமண பந்தத்தில் சிக்கல் உள்ள மோசமான நபராக எப்படி ஆகிவிடுகிறார் என்பது பெரிய உளவியல் சிக்கலான ஒன்றாக உள்ளது.
அதை விடுத்து, இந்த சிக்கல்கள் விவாகரத்தில் கொண்டுவந்து விடுகிறது.. விவகாரத்த்தும் ஆகிவிடுகிறது..
அடுத்து....
எல்லாம் திட்டமிட்டபடிதான் அடுத்த வாழ்வு உடனே அமைந்து விடுகிறதா? அமைந்தால் ரொம்ப நல்லது.. ஆனால்..
பலருக்கு அதில் இருந்து அடுத்த சிக்கல் துவங்குகிறதாக இருக்கிறது..!
எனக்கு தெரிந்த ஒருவரின் வாழ்வு இப்போது விவகாரத்து கிடைத்து தனது அடுத்த திருமணம் அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகும் முன்பாகவே அவருக்கு திருமணம் செய்துவிட நினைத்து பெண் பார்க்க துரிதம் காட்டினார்கள். வருடங்கள் ஓடிவிட்டது. வயதும் கூட கூட மிச்சமிருக்கும் வாழ்வின் காலங்கள் குறைந்து கொண்டே வருகிறது.
இன்று வரை... பெண் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.! பலருக்கு இலகுவாய் அமைந்துவிடும் இரண்டாவது வாழ்வு சிலருக்கு உள்ளத்தில் புற்றாக ஆக்கும் கொடும் உளைச்சலுக்கு தள்ளிவிடுகிறது.!
நிற்க,
விவாகரத்து பெற்ற எல்லோருக்குமே முந்தைய வாழ்வு நரகமாக இருந்ததா, அவ்வளவு கொடுமைகளா, தீர்க்க இயலா பிரச்சினைகளா என்று பார்த்தால் அப்படி எல்லோருக்கும் இல்லை என்றுதான் தெரிகிறது.
அதே வேளையில் இதைவிட பன்மடங்கு நரகமாக தெரியும் வாழ்க்கையை, உச்சபச்ச கொடுமைகள் நிறைந்த வாழ்க்கையை, தங்களின் விட்டுக்கொடுக்கும் அல்லது புரிதலின் அமைதிகாக்கும் சில அணுகுமுறையால், அன்பை தொடர்ந்து வெளிப்படுத்திய செயல்களால் தங்கள் வாழ்க்கையை சீராக்கி நிம்மதியின் பாதையில் சென்றவர்களும் இருப்பது கண்கூடு .
எல்லோருக்கும் இது சாத்தியமா தெரியவில்லை . ஆனால் இந்த வாழ்க்கை சரிவராது இனி, அடுத்த வாழ்க்கைக்கு போயிடலாம் எனும் முடிவை எடுக்கும் பலருக்கும் அடுத்த வாழ்வு தயாராக இருந்தால் அது அவர்களுக்கு வழியாக அமையும், இல்லையேல் காலம் தரும் வலியாக அமையவும் வாய்ப்பு உண்டு.
கடினமான வாழ்வியல் சூழலுக்கு பிரிவுதான் முடிவு என்பது ஏற்புடையது. ஆமாம், கடின நெருப்பில் தினமும் மனம் வெந்து வாழ்வதை காட்டிலும் அதை விட்டு நீங்குவதே நல்லதுதானே.
ஆனால், அந்த கடினத்தின் அளவீடாக எது இருக்கிறது என்பதுதான் அது கடினமாகவே இருக்குமா அல்லது இளகும் தன்மை உண்டா என்பதை தீர்மானிக்கிறது.
கொஞ்சம் சீராய்ந்து பார்க்க வேண்டிய வாழ்க்கைதான் பலரிடத்திலும் உண்டு. விட்டுக்கொடுப்பது என்பது தங்கள் உரிமை பறிப்பு என எண்ணுவது உலக அறிவு, எனக்கான சக உயிருக்கு என கனிவை காட்ட என்னால் முடியும் என இடம் கொடுப்பது அன்பு சார்ந்த முடிவு.
ஏனெனில்.. எனது வயது அனுபவத்தில், இரண்டாவது திருமணம் ஆகிய சிலரின் அனுபவங்களை கொண்டு நோக்கும்போது அந்த வாய்ப்பும் கடினமாக இருக்கிறது, இதை விட்டுவிட்டால் என்னாவது எனும் இறுக்கமான சூழலுக்குள் தள்ளுகிறது.
இருப்பதை முடிந்தவரை அன்போடு நகர்த்த முடியும் என்றால் அதை சிறந்ததாகவும் ஆக்கிட முடியும்.! பின்னான தெரியாத வருத்தமோ சந்தோஷமோ அதை கற்பனை கட்டிக்கொண்டு இருப்பதை கூடுதல் சிக்கல் ஆக்கி பிரிவது நல்ல முடிவாக பலருக்கு இல்லை என்பதை என்னளவில் கண்டறிந்த ஒன்று.!!
அன்புடன்
பூங்குன்றன்

கருத்துகள்
கருத்துரையிடுக