“சார்.. வேற வழி இல்ல சார்..”
“ஆனால் இதை உள்ளம் ஏற்க மறுக்கிறதே.. தாளாது ..தாளாது..”
“சார்.. தமிழ்ல என்னை கொல்றீங்க.. நீங்க வேணுன்னா தமிழ் பண்டிதரா இருக்கலாம். ஆனா அவன் இந்த கல்லூரி பிரின்சிபால் மகன், நாம பிரின்சிபால என் பகைச்சுக்கணும்.. புரிஞ்சுக்குங்க.. பேசாம கவிதை போட்டிக்கு அவன் விரும்புற மாதிரி அவன் பெயரையும் சேர்த்துக்குங்க..” என்று கெஞ்சினார் பியூன்.
தமிழ் பேராசிரியர் தமிழ்மகன் தன் முகத்தை இரு கரங்களாலும் துடைத்துக்கொண்டார், அண்ணார்ந்து விட்டத்தைப் பார்த்தவாறே..
“எம் தாய்மொழிக்கு இது சோதனை.. அவன் எழுதிய கவிதைகளை நாம் கேட்டால் வேதனை”
“இது என்ன ரோதனை” என பியூன் மனதினுள் முனகிக்கொண்டார்..
“சரி.. நீர் சொல்லுகிறபடி அவன் பெயரை சேர்க்கலாம்.. இல்லையெனில் முதல்வர் முறைத்துக்கொண்டே இந்த ஆண்டுமுழுவதும் கல்லூரியில் கசப்பை உமிழ்வார்..” என்றார் தமிழ்மகன்.
“சார்.. அவரு உமிழ்ந்தாகூட தொலையுதுன்னு போகலாம்.. இந்த பய அவன் பெயரை சேர்க்கலைன்னா கலை நிகழ்சிகள் எல்லாத்தையும் ரகளை செஞ்சு கலச்சிடுவான் சார்..”
“அய்யகோ.. மற்ற மாணாக்கர்களின் நலம் பேண வேண்டுமே, ஆகவே மாயத்துரை பெயரையும் சேர்த்துவிடுங்கள்” என்று கூறி நொந்து போனவாறே எழுந்து சென்றார்.
பியூன் “மாயத்துரை” என்று எழுதுகையில் வராண்டாவின் சற்று தூரத்தில் பேராசிரியர் தமிழ்மகனின் குரல் கேட்டு திரும்பினார்..
“கவிதை போட்டிக்கு மொத்தம் எந்தனை மாணாக்கர்கள் பெயர் தந்துள்ளனர்?” என வினவினார்.
பியூன் எச்சில் இறங்க மறுக்க, தொண்டை அடைத்தவாறே கூறினார்.
“அவன் மட்டும்தான் சார்..!”
..........................................................
மாயத்துரை.. ஒரு சரியான அறுந்தவாலு..
கல்லூரி முதலரின் மகன் என்பதால் மூன்றாம் ஆண்டு மாணாக்கர்களிடம் கூட வம்புக்கு செல்வான். அவனின் கவித்துவம் பற்றி அறியாமல் அவனுக்கு ஒரு நிகழ்ச்சியில் கவிதை வாசிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கவிதை என்ற பெயரில் அவன் வசித்ததை கேட்டதும் அவன் தந்தைக்கே ஒரு வாரம் ஜன்னி. மெடிக்கல் லீவுல மனுஷன் போய்ட்டார்.
“கல்லூரிக்கு நான் வந்தது என்ன லேசா
கல்லூரிக்கு வராம போக நான் என்ன லூசா..
வாசலின் வழியே நான் வந்தேன் ராசா
படிக்கவே வந்தேன் படிக்கவே வந்தேன் நைசா
பஸ்ச புடிச்சு நான் வந்தேன் வெரசா........”
இப்படி துவங்குது அவன் கவிதை.. கெடச்ச இடத்திலெல்லாம் ஆச்சர்யகுறியை போட்டு மூணு பக்கத்திலும் குதறி வச்சிருந்தான். முதல் பக்கத்தை வாசிச்சுகிட்டு இருக்கையிலேயே முதல்வர் நெளிந்தாராம். தலைமையேற்க வந்த மேடத்தோட ஸ்ட்ரைட்டனிங் செய்திருந்த தலைமுடிகூட மயிர்கூச்செறிய மூன்றாவது பக்கத்தை முடித்தானாம் அவன்.
அதன் பிறகு கல்லூரியில் கவிதை சம்பந்தமா யாரும் வாய் திறப்பதே இல்லை. ஆண்டு இறுதியில் நடக்கும் கலை நிகழ்சிகள் இது.
வேறு யாரும் பரிசுகள் வாங்க கூடாது என்று மற்ற மாணவர்களை கவிதை போட்டிக்கு மட்டும் பெயர் கொடுக்காது மிரட்டி வைத்தான். எனவே முதல் பரிசு அவனுக்குத்தான் என்று அவன் கணக்கு போட்டிருந்தான்.
..........................................................
“தமிழய்யா.. வணக்கம்.. கவிதை போட்டியில் வெல்ல என்னை வாழ்த்துங்கள்” என தமிழ் பேராசிரியர் தமிழ்மகன் முன் திடீரென முளைத்தான் மாயத்துரை.
“சாத்தான் வேதம் ஓதினால் கூட கேட்பேன். தமிழன்னைக்கு இது சோதனைக்காலம்” என மனதினுள் முனகியவாறே,
“ஒரு முறைக்கு இருமுறை நீ எழுதிய கவிதையை உன் தந்தையிடம் கூறப்பா.. கவிதையை மெருகேற்ற அவரின் ஆலோசனைகளும் கிடைக்குமல்லவா..” என்றார். அப்படியாவது ஏதும் சம்பவம் நடந்து நிலை மாறிவிடாதா என்பது அவரின் எண்ண ஓட்டம்.
“அய்யா.. என் கவிதையை நான் போட்டியில்தான் வாசிப்பேன். எல்லோருக்கும் இன்ப அதிர்சியாய் இருக்குமல்லவா” என்று கூறிவிட்டு தலைவணங்கி சென்றுவிட்டான்.
பேராசிரியருக்கு AC அறையிலும் வேர்க்க துவங்கியது.
சற்று நேரத்தில் பியூன் தலைதெறிக்க ஓடிவந்தார்.
“சார். பெரிய குழப்பம் ஆகிடுச்சு.” என்றார்.
“என்ன ஆயிற்று என என் ஐயம் தெளிவுரக்கூறு. அவன் இப்பொழுதே கவிதையை ஏதும் வசித்துவிட்டானா” என்றார் புருவம் உயர்த்தி.
“அட. கவிதை போட்டிதான் முதலில் நடத்தணுமாம். அவங்க அப்பாகிட்ட கத்திகிட்டு நிக்குறான்..”
“தொலையட்டும். வாசித்து தொலயட்டுமே. பின்பாவது மற்ற போட்டிகளை நாம் செவ்வனே நடத்தலாம் அல்லவா. மகிழ்கிறேன் நான்” என்றார் பேராசிரியர்.
“நல்லா மகிழ்ந்திங்க. அவன் வாசிக்க கேட்டா நம்ம நிம்மதி போயிடும். போன முறை அவன் வாசிச்ச கவிதையை கேட்ட மேடத்தோட தலைமுடி இன்னும் படியாம கெடக்காம்.. ஒரு வருசமாச்சு சார்.. நெலமைய புரிஞ்சுக்குங்க.” என்று பதறினார்.
விபரீதம் புரிந்தவராய் பேராசிரியர் முதல்வர் அறைநோக்கி விரைய, அதற்குள் மாயத்துரை எல்லாம் சாதித்திருந்தான். பேராசிரியர் முதல்வர் அறைக்குள் நுழைய செல்லுகையில்,
“அய்யா, கவிதை போட்டிதான் முதல் போட்டி” என குதூகலமாய் வெளியே வந்தான்.
“அய்யகோ” என்றவாறே பேராசிரியர் சுவரோரமாய் சாய்ந்தார்..
................................................
கலை நிகழ்சிகள் கோலாகலமாக துவங்கின. வண்ண வண்ண ஆடைகளுடன் ஆங்காங்கே மாணாக்கர்கள் கூட்டம் சிதறிய பூக்களாய் தெரிந்தது.
நிகழ்ச்சி..
மேடையில் முதல்வர் விருந்தினர்கள் அமர்ந்திருந்தனர். வரவேற்புரை நிறைவுற்றது.
போட்டிகளை அறிவிக்க தமிழ் பேராசிரியர் மைக் அருகில் வந்தார்..
நிகழ்சிகளை அறிவித்தவாறே அவரின் கண்கள் மாயத்துரையை தேடியது. அவர் கண்ணில் படவேயில்லை என்பதால் எதோ கிரகம் அவரை விட்டு விலகியதாக எண்ணியபடியே செருக்காக பேசிக்கொண்டிருக்கையில், பத்து பதினைந்து பேப்பர்களுடன் மாயத்துரை திடீரென காணப்பட்டான்.
அவனைக்கண்டதும், தும்மலா இருமலா என அறிய இலாத வினோத சந்த்தத்தை பேராசிரியர் பேச்சினூடே எழுப்பினார்..
பியூன் ஓடிவந்து “ அய்யா, தண்ணிய குடிங்க” என வாட்டர் பாட்டிலை நீட்டினார்..
ஒரு வகையில் சமாளித்தவராய் பேராசிரியர் “முதலில் கவிதை போட்டி, மாயத்துரை கவிதையை வாசிக்க கேட்போம்” என கூறிவிட்டு தொப்பென இருக்கையில் அமர்ந்தார்.
மாயத்துரை மேடை ஏறினான்.. மைக் அருகில் ஒருமுரை செருமிக்கொண்டான்..
பேராசிரியர் இருக்கை அருகில் நின்ற பியூன் அந்த செருமலை கேட்டவுடன் சாணியில் கால் பதித்ததுபோல “ம்க்கூம்ம்ம்...” என முகத்தை சுளித்தார். அவரின் கண்கள் பீதி கலந்த வெறுப்பில் இருந்த பேராசிரியரை கவனிக்க தவறவில்லை..
மாயத்துரை கவிதை (!) வாசி”க்க ஆரம்பித்தான்..
“கவிதை ராக்கெட்டு வீச வந்தேன்
நான் கவிதை ராக்கெட்டு வீச வந்தேன்..”
முதல்வரும், விருந்தினர்களும் முதல் வரியிலேயே நெளிவதை கண்டு பியூன் குனிந்து பேராசிரியரிடம் கிசுகிசுத்தார்....
“சார்.. எதுக்கும் 108க்கு ஒரு போனை போட்ருவோம்”
......................................................................................................................................... :)

கருத்துகள்
கருத்துரையிடுக