ஆறாம் வகுப்புக்கு வாய்ப்புகள் இல்லை
ஐந்துடன் கடந்தேன் வறுமையின் நிழலை
நன்கு புறத்திலும் கடனின் தொல்லை
மூன்று வேளைக்கு உணவும் இல்லை
தன்னிலை அறிந்து வேலையில் நுழைய
என்னிலை ஆனது முன்னிலும் மெலிய
கல்வியை விட்டே கடந்துநாள் கழிய
செல்வத்தை பெறனுமே பள்ளியில் நுழைய
வாடிய நாட்களில் எடுத்தேன் சபதம்
கூடிய மட்டும் படிக்கணும் பலவும்
ஏட்டு சுரைக்காய் உதவுமோ கறிக்கும்
ஞானத்தை அடைந்தால் ஊரே வியக்கும்
கல்வியை பெற்று வேலையே தேடவோ
வேலையில் இருந்தே கல்வியை நாடவோ
பள்ளியின் பாடங்கள் பட்டங்கள் சூடவோ
வாழ்வின் பாடங்கள் ஞானத்தை தரவோ
காலை மாலை வேலைகள் செய்தேன்
வேளை வாய்க்கையில் நூல்களை கற்றேன்
பள்ளிக்கு வெளியிலும் ஆயிரம் பெற்றேன்
கல்வி என்பதன் கருப்பொருள் அறிந்தேன்
நாட்கள் கடந்தது நானும் வளர்ந்தேன்
ஞானத்தில் ஆயிரம் நூல்களில் திளைத்தேன்
உலகம் கொள்ளாது பற்பல அறிந்தேன்- கல்வி
பள்ளிக்குள் மட்டுமல்ல என்பதை உணர்ந்தேன்
- 🌺பூங்குன்றன்🌺

கருத்துகள்
கருத்துரையிடுக