புதியன புகுத்துதலில்
ஏற்பட்ட மாற்றங்களே மனித சமூகத்தின் மாற்றத்திற்கான அத்தாட்சியாக இருந்துவருகிறது.
சூழல்களை தனக்கு ஏற்றார்போல மாற்றி அமைத்துகொள்வதில் மானுடத்திற்கு நிகரில்லை.
தேடல் மனித குல
வாழ்வை உற்சாகமாக மாற்றிவிடுகிறது என்பது மிகையல்ல. ஆனால் மிகையான தேடல்கள்
மானுடத்தை ஏதோ ஒரு அசுர குணத்தை நோக்கி உந்தி தள்ளுகிறது.
சமீபத்தில் செவ்வாய்
கிரகத்தில் விலங்கின் தொடை எலும்பு போல ஒரு புகைப்படத்தை அந்த கிரகத்தில் தனிக்காட்டு
ராஜாவாக சுற்றி திரியும் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பியது. இது போதாதா..?
இது இப்படியே இருக்கட்டும்.
சற்று அந்தமான் சென்டினல் (1771ல் பிரிட்டிஷ் கம்பெனி இப்பெயரை வைத்தது என்கிறார்கள், சென்டினல் என்றால்
காவலாளி என பொருள்) தீவு பக்கம் நடந்ததை
பார்க்கும் முன்..
அங்கு சென்று கொல்லப்பட்ட
ஜான் ஆலனின் டைரி குறிப்புகளில் இருந்து
கிடைத்த ஒரு செய்தி பின்வருமாறு..
மூன்றாவது நாள் அங்கு
சென்றபோதே அவருக்கு தனது மரணம் பற்றி தெரிந்திருக்கிறது. அதனாலேயே, "நான் சூரியன் மறைவதைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன். அழகாக உள்ளது. அழுகிறேன். இதுதான் நான் பார்க்கும்
கடைசி சூரிய அஸ்தமனமா என்று தெரியவில்லை" என எழுதியிருக்கிறார். மீண்டும்
மீனவர்களை சென்டினல் பகுதியில் விடுமாறு கூறியிருக்கிறார். அடுத்த நாள் மீனவர்கள்
வந்தபோது பழங்குடிகள் ஜான் சாவின் சடலத்தை இழுத்துக் கொண்டிருந்ததையே மீனவர்கள்
பார்த்துள்ளனர்.
இது
முதல் முறை அல்ல.. பல கரை ஒதுங்கிய கப்பல் மாலுமிகளையும், வேண்டுமென்றே தீவுக்குள்
நுழைந்தவர்களையும் அழித்துள்ளனர். தங்களை காத்துக்கொள்வதற்காக.
எத்தனையோ மனிதர்களை
தங்கள் எதிரிகளாக எண்ணி அழித்த பழங்குடிகள் அவர்கள் என்பது நன்கு தெரிந்தும்
மீண்டும் மீண்டும் அங்கு சென்று அவர்களை இந்த மானுடம் சீண்டுவது ஏன்..? உலக பொது
உறவுகள் சாயம் படாது தங்களின் தீவே தங்களின் உலகம் எனும் எண்ணத்தில் வாழும்
மக்களிடம் செல்ல ஏன் துடிக்கவேண்டும்.
இந்த அறிவியல்
வளர்ச்சி உலகில், எதையும் துழாவி பார்க்கும் எண்ணம் எப்படி உதிக்கிறது. அரசு போக
கூடாது என தடை விதித்த தீவிற்குள், கடல் எல்லை பாதுகாப்பு படைகளின் கண்களில் படாது
சென்றிருப்பது ஆபத்தான விடயமே. தெரிந்தது இத்தனை.. தெரியாது இதுவரை சென்று
வந்தவர்கள் (இறந்தவர்கள்) எத்தனை எத்தனையோ.
இவை எல்லாவற்றிக்கும்
மேலாக, பக்கத்தில் இருக்கும் தீவே உலகமாக வாழும் பழங்குடிகளாகட்டும், சிறு
புள்ளியாய் கண்ணில்படும் வெகு தூரத்தில் உள்ள செவ்வாய் கிரகத்திலாகட்டும்,
தங்களின் அதீத தேடல்களின் பசிக்காக எங்கும் நுழையும் அதிகாரம் யாரிடம் இந்த அறிவியலில்
வளர்ந்தாய் பிதற்றிக்கொள்ளும் மானுடம் பெற்றது.
ஒரு கிரகமாகட்டும்
ஒரு தனித்து விடப்பட்ட தீவாகட்டும் அதை அதின் தன்மை அறியாது சீண்டும் போக்கு மிக
ஆபத்து என்பதை அந்த தீவில் தன்னை தற்காத்துக்கொள்ள கையில் கத்தியுடன் காணப்படும்
சிறுவனின் நிலை உணர்த்தவில்லையா..?
சென்டினல் தீவு நிலை
இப்படி என்றால், அந்தமானில் இருக்கும் பழங்குடி இன மக்களின் நிலையை மிக மோசமான படிநிலைக்கு
நாம் தள்ளியுள்ளோம். சுற்றுலா காட்சிப்பொருளாக, விலகுகள் போல நாம் வீசும் உணவு
பொருளுக்காக அலைபவர்களாக, காம வெறி கொண்டு அலையும் நவீன காட்டுமிராண்டிகளுக்கு
இரையாகும் மக்களாக அவர்களை அவர்களின் இருப்பிடத்தினுள் நுழைந்து துரத்திக்கொண்டு
அதை சாதனையாக அரங்கேற்றிக்கொண்டு நிற்கிறோம்.
கடைசியாக ஒன்று.
அறிவியல் வளர்ச்சியின்
போதை பித்தேறி அதீத தேடல்களில் பறந்து திரியும் மானுடத்திற்கு சென்டினல்
காவலாளிகள் கூறுவது கீழ்க்கண்டவாறாகவும் இருக்கலாம். ,
“எங்களை எங்கள் உலகில்
சமாதானமாக வாழ விடுங்கள், ஒருவேளை நீங்கள் செவ்வாய் கிரகத்திற்கு மேய விட்ட கியூரியாசிட்டி ரோவர் உங்களை சீண்டிப்பார்க்க புறப்படும் வேற்று கிரகவாசிகளின்
புகைப்படங்களையும் விரைவில் அனுப்பக்கூடும்”

கருத்துகள்
கருத்துரையிடுக