ஊருக்கொரு
இஞ்சினியரு மலையேறி போனகாலம்
முக்குக்கு
ரெண்டுபய நிக்கானே மந்திகணக்கா
எங்கய்யன்
படிக்கலையே நானுந்தேன் அப்படியே
மவராசா
என்மகனே நீ ஏன் ஆன இஞ்சினியரு.!
அரைவயிறு
கொரவயிறு எப்பவாச்சும் சுடுசோறு
ஆனாலும்
செவனேன்னு படிச்சியேடே ஏராசா
ஊரென்ன
சொன்னாலும் உடும்பாட்டம் படிச்சுபுட்ட
அடுத்தென்ன
வேலையின்னு கேக்குதடே ஊருசனம்..!
வெள்ள
மனசுபுள்ள நீ படிச்ச படிப்பெதுவோ
காடு
கரை வித்த மண்ண கண்ணீரு காசாக்கி
வீடு
மாடி ரோடு போட நல்லாத்தான் நீ படிச்ச
வீடு
ஒன்னு பாக்கியிருக்கு அதகாக்க வேலைபாரு..!
நல்லவனா
நா உன்ன வளர்த்ததுதான் தப்பாச்சோ
நீபோன
எடம் எல்லாமே தப்பாதான் தெரிஞ்சிச்சோ
மவராசா
எம்மவனே தப்பிச்சி வந்துடுடே
கொலைகார
கூட்டத்துல உசுராவது மிஞ்சிடுமே..!
போட்ட
ரோடு காயுமுன்னே புட்டுகிட்டா உனக்கென்ன
ஏறி
குளம் தூர்வார அவக வயித்தில் போட்டா உனக்கென்ன
மண்ணை
கொள்ளை அடிச்சாதான் நீ ஒதுக்கிவந்துபூடு
கண்ணெல்லாம்
தேடுதப்பா உசிரோட இருக்கியாடே..!
தெரியாம
உன்னத்தான் தெம்புக்கு படிக்கவச்சேன்
வெள்ளந்தி
மனசுக்காரா படிச்சியேடே பலபாடம்
தப்புகள
கண்டுக்காம விட்டுடத்தான் படிக்கலியோ
தட்டிகேட்டா
உசுருபோகும் உனக்காரும் சொல்லலியோ..!
பெத்தவயிறு
குளிருது உன்நேர்மையத்தான் நெனைக்கையில
அடுத்தகனம்
பத்திகிட்டு எரியுதேடே கொலைகார ஊரிதுடே
போதுமடே
படிச்சதுக்கு நீபாக்கும் வேலையெல்லாம்
நல்லதுக்கு
காலமில்லை வந்துபுடு வீட்டுக்குத்தான்..!
தாசில்தார
வெரட்டிபோட்டு மண்ணு வண்டியேத்தி கொன்னுடுறான்
தடுக்கபோன
போலீசு குடும்பத்த தரைமட்டம் ஆக்கிடுறான்
இஞ்சினியரு
நீயெல்லாம் எம்மாத்திரம் ஏ மவராசா
வெரசாத்தான்
வந்துசேரு வெவசாயம் பாத்துக்கலாம்.!!
-பூங்குன்றன்

கருத்துகள்
கருத்துரையிடுக