[இன்று....]
“....... காரணங்கள் எற்புடையதாக
இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெற கூடாது என்று இந்த கோர்ட்
கருதுகிறது. எனவே குற்றம் சாட்டப்பட்ட மாயத்துரைக்கு மூன்று மாத சிறை தண்டனையும் கூடுதலாக
போட்டோகிராபரின் மருத்துவ செலவிற்காக இருபத்தைந்தாயிரம் ரூபாயை மாயத்துரை கொடுக்க
வேண்டும் என தீர்ப்பளிக்கிறேன். கூடவே இதுபோன்ற செயல்களில் இயல்புக்கு அதிகமாக
செயல்பட வேண்டாம் என போட்டோகிராபர்களுக்கு இந்த கோர்ட் ஆலோசனை செய்கிறது.”
நீதிபதியின் வாகன ஓட்டுனர், பக்க வாசல் கதவருகே நின்று
இந்த தீர்ப்பை கேட்டது மட்டுமல்ல, இந்த தீர்ப்பை வாசித்தபின் நீதிபதி விட்ட
பெருமூச்சையும் கவனிக்க தவறவில்லை.
............
[மூன்று மாதங்களுக்கு முன்..]
“சொல்லுண்ணே...” என்றான் மாயத்துரை.
“டேய்..
புரோக்கர் ஒரு பொண்ணு போட்டோவும் ஜாதகமும் கொடுத்துட்டு போயிருக்கார், பொருத்தம்
இருக்கு. பொண்ணும் பாக்க லட்சணமா இருக்குடா............”
“இதோ
பாருண்ணே, நான் வெளிநாட்டில் இருக்கேன். நீங்க என்னடான்னா பொண்ணு பாக்குறேன்னு
ரெண்டு வருசமா இழுத்துகிட்டே இருக்கீங்க. இதே மாதிரிதான் போனதடவ நான் ஊருக்கு
வந்து பார்த்தேன். அப்புறம் ஜாதகம் சரியிலான்னு சொல்லி எல்லாம் வேஸ்ட்டா
போச்சு.........”
“அடே..
நாம பார்த்த ஜோசியர் பதினோரு பொருத்தம் இருக்குன்னு சொன்னாரு. அதான் உன்ன
வரவச்சோம். கல்யாணத்தையே முடிச்சிடலாம்னு நினைக்கையில் பொண்ணு வீட்டுல செகண்ட்
ஒப்பினியன் அது இதுன்னு சொல்லி அவங்க மூணு இடத்தில் ஜாதகம் பார்த்து அதுல
ரெண்டுபேரு கன்னி தோஷம் கிண்ணி தோஷம்னு அது இதுன்னு கடைசில சொல்லிட்டாங்க. நாங்க
என்ன பண்ணுறது”
“அதான்
சொல்லுறேன். கெரகத்த.. ஒருதடவை வந்து போற
பிளைட் டிக்கெட் காசு இருந்தாலே ஒரு கல்யாணத்தை முடிச்சிடலாம் போலிருக்கு. மொதல்ல
பொண்ணு வீட்டுல ஜாதகத்த பார்க்க சொல்லு. அவங்களுக்கு திருப்தியா ரிசல்ட் வந்தா
அப்புறமா பேசிக்கலாம்”........ ப்ளிக் என போனை கட் பண்ணினான் மாயத்துரை.
அடுத்த நொடி..!!
வாட்ஸ்அப் சிணுங்கியது. ஓபன் செய்து பார்த்தான். குப்பென
உடல் சிலிர்த்தது.
வச்ச கண்ணு வைக்காம போட்டோவையே பார்த்து நின்றான்
சிலையாக.
ஓஹோ.. பரவாயில்லையே.. அம்மாவும் அண்ணனும் எனக்கு
பொருத்தமான பொண்ணாதான் பாத்திருக்காங்க போல.
வாவ்.. பொண்ணு மாசு மரு இல்லா முகம். பிங்க் நிறத்தில்
ஏதோ வட இந்திய நடிகை போல அல்லவா இருக்கிறாள். மான் விழி என்பது இதுதானோ..! பத்து
பதினைந்து முறை ஜூம் செய்து பார்த்து மான் விழிகளை ரசித்தான்.
போட்டோவில் அவள் வைத்திருந்த மல்லிகையின் வாசம்
மாயத்துரையின் சுவாசத்தில் கலந்ததுபோல இருந்தது.
“ச்சே..
அண்ணனிடம் பேசிட்டு இருக்கையிலேயே கோவத்தில் கட் பண்ணிருக்க கூடாது” நொந்து கொண்டான். ரைட்டு ஊருக்கு
டிக்கெட் போட்டுட வேண்டியதுதான் என குதூகலித்தான்.
“எனக்கு
பிடிச்சிருக்கு” என பதில் டைப்பினான்.
...........................................
ஒரு மாதம் கழித்து.!
பெண் வீடு.!
வரவேற்பு பிரமாதம். பின்ன வெளிநாட்டு மாப்பிளைன்னா
சும்மாவா என மனதில் பெருமிதம் கொண்டான் மாயத்துரை.!
சில நிமிடங்கள் கழித்து.....
“யண்ணே,
என்னண்ணே பொண்ணு வீட்டில் யாருமே பொண்ணு கலரில் இல்லையே, அந்த போட்டோவுக்கும் இந்த
குடும்பத்துக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி சூழல் கரு கருன்னு இருக்கே” என கிசுகிசுத்தான்.
“அடேய்.
வாய மூடு, பொண்ணோட அப்பா கலர பாத்துட்டு முடிவுக்கு வராத. அம்மா நல்ல கலரா
இருக்கலாம்”
“கலர
விடுண்ணே, அந்த முகக்களை, மான்விழி ஜாடை கூட...............”
“அடேய்..
கொஞ்சம் இருடே.. அமைதியாய்” என்ற அண்ணனை “ஹிம்ம்ம்..” என சலித்துக்கொண்டு தேமே என பார்த்தான் மாயத்துரை.
“இவங்கதான்
பொண்ணோட அம்மா” சத்தம் வந்த திசையை நோக்கி
பார்த்த மாயத்துரைக்கு சிறிய மாரடைப்பு வந்ததுபோல இருந்தது. அவனின் அண்ணனுக்கோ
குடிச்ச ஜூஸ் மீண்டும் தொண்டைக்கு புரைஏறியது.
பெண் வருகை....
“அது
யாரு.. அய்யய்யோ.. அதுதான் பொண்ணா,.. ஏதோ சுவத்துல விழும் நிழல் மாதிரி.. நான்
போட்டோவில் பார்த்த மாசு மருவற்ற பொண்ணு எங்கே” என மாயத்துரை கலங்கினான்.
“பெரியவங்களுக்கு
வணக்கம் சொல்லும்மா” என்றார் ஒரு பெண்மணி.
“அட
பாவிங்களா.. போட்டோவுக்கும் பொன்னுக்கும் குறைந்தது அறுபது வித்யாசம் இருக்கும்
போலிருக்கே, கடவுளே.. இவன் என்ன பண்ண போறானோ எங்களை” என்றவாறு மாயத்துரை அண்ணன் விக்கித்து
மாயத்துரையை பார்க்கும் முன்னே மாயத்துரை சட்டென எழுந்தான். அண்ணன் மேலும் கலவரமடைந்தது
அவரது கண்ணிலே தெரிந்தது.
“என்ன
மாப்புள எந்திரிச்சு நிக்குறீங்க.. உட்காருங்க சேரில்” என்றார் ஒரு முதியவர்.
“பெருசு..
இங்க கொஞ்சம் வர்றது” என மாயத்துரை கூப்பிட்டான்.
“டேய்..
என்னடா பெருசு கிருசுன்னுகிட்டு.. அவருதான் பொண்ணோட தாத்தாடா” என்று எழுத்து அண்ணன் மாயத்துரை காதருகே
கிசுகிசுத்துகொண்டிருக்கும் போதே, பெண்ணின் தாத்தா அருகே வந்து..
“சொல்லுங்க
மாப்புள” என்றார். சற்று மப்பிலும்
இருப்பதை வாடை உணர்த்தியது. எல்லோரின் கண்களும் மாயத்துரை மற்றும் தாத்தாவின் மீது
அசைவற்று இருந்தது.. ஆர்வமாய்..
“இது
யாரு..” என கூறி மாயத்துரை தனது
மொபைலில் உள்ள போட்டோவை காண்பித்தான்.
தாத்தா அந்த போட்டோவை கூர்ந்து கவனித்தார். “யாரு.. சரியா மட்டுப்படலையே” என முனுமுனுத்தவர் மாயத்துரையை
ஏறிட்டு பார்த்தார். அவன் அமைதியாய் இருப்பது தாத்தாவுக்கு என்னவோ போலிருந்ததால்
மொபைலை தன கையில் வாங்கி மீண்டும் ஏறிட்டு பார்த்தார்.
மாயத்துரை இப்பொழுது போட்டோவில் முகத்தை ஜூம் செய்தது
காட்ட, சில வினாடிகளில் தாத்தாவின் முகம் பிரகாசித்தது.
“அட..
என் பேத்தி..” என சிரித்தார். எல்லோரும்
கெக்கே பிக்கே என சிரித்தனர். எல்லோரும் சிரித்தனர்.
“பாத்திங்களா
தம்பி.. என் பேத்திய எவ்ளோ அழகா போட்டோ பிடிச்சிருகாருன்னு.. இவுகதேன் அந்த போட்டோ
கிராபரூ” என அருகில் சேரில் அமர்ந்திருந்த
ஒருவரை காட்டினார் தாத்தா..
“ஹி..ஹி..ஹி..
பத்து வருசமா இந்த ஊருல நான்தான் போட்டோ பிடிக்குறேன். நம்ம கைவண்ணத்துல சும்மா சினிமா ஸ்டார் கணக்கா பளிச்சுன்னு பிரின்ட்
போட்ருவோம் மாப்புள.. உங்க கல்யாணத்துக்கும் நா......” என போட்டோகிராபர் பேசி முடிக்கும்
முன்..
“அடேய்,
துரோகி..” என போட்டோகிராபர் மீது பாய்ந்தான்
மாயத்துரை.
“மாப்புள..
பொறுமையா இருங்க.. போட்டோகிராபர் என்ன செஞ்சாருன்னு இப்டி அவர போட்டு உலுக்குறீங்க” என்றார் தள்ளாடியபடியே அருகே வந்த தாத்தா..
“என்ன
செஞ்சாராவா.. யோவ்.. பெருசு.. மனசாட்சிய
தொட்டு சொல்லுய்யா நீ... பொண்ணோட தாத்தா
நீயே அந்த போட்டோவ பாத்து அது உன் பேத்திதான்னு கன்பார்ம் பண்ணவே ரெண்டு நிமிஷம்
ஆகுதுன்னா, இவன் அந்த போட்டோவ அடையாளம் தெரியாத அளவுக்கு அழகு படுத்தியிருக்கான்” என்றவன் போட்டோகிராபர் பக்கம்
திரும்பி
“அடே.. நீ பண்ணுன காரியத்தோட வீரியம் உனக்கு
புரியாது.. உனக்கு காரியம் பண்ணிட்டு அப்புறம் நான் ஊருக்கு போறேன்” என்ற மாயத்துரை யாரும் நினைத்து
பார்க்காத காரியத்தை செய்தான்.
“இந்த
விரல் தானேடா மவுச பிடிச்சு கம்ப்யூட்டரில் எல்லா போட்டோவையும் டிஜிட்டல் ஆள்மாறாட்டம்
பன்றதுபோல ரதி போல எடிட் பண்ணி மாத்துது, இதுனால எவ்ளோபேறு ஏமாந்து போறாங்க
தெரியுமா” என கத்தியவாறே பழங்கள்
தட்டில் இருந்த கத்தியை எடுத்து போட்டோ கிராபரின் ஆள்காட்டி விரலை வெட்டினான்.
..............................
[இன்று..]
காரில் மாலை வீடு திரும்புகையில்...
‘அய்யா..” என ஓவர் இழுவையில் ஓட்டுனர்
கிருபா பேச்சை துவங்க..
“சொல்லு
கிருபா, எதோ சொல்லவந்து அப்படியே தயங்குற.. என்னாச்சு” என்றார் நீதிபதி.
‘இல்லங்கய்யா.. இன்னைக்கு தீர்ப்பு சொன்னப்ப உங்க முகமே
சரியில்ல. அதுவும் தீர்ப்ப வாசிச்சு முடிச்சிட்டு ஒரு பெருமூச்சு விட்டதையும் நான்
கவனிச்சேன். இதுவரை அப்படி நீங்க இருந்ததே இல்லையேய்யா... அதான்......”
நீதிபதி அமைதலாய் இருந்தார்.
“அய்யா,
நான் ஏதும் தவறா கேட்டுட்டேனோ. மன்னிச்சிடுங்க” என்றவாறே கியரை மாற்றினான் கிருபா.
“அப்டிலாம்
ஒன்னும் இல்ல. அந்த மாயத்துரை கதையும் என் கதையும் ஒண்ணுதான். என்ன... அப்போ கருப்பு வெள்ளை போட்டோ. இப்போ கலர்
போட்டோ.. அவன் உணர்ச்சிவசப்பட்டதால மூணு மாச தண்டனை. நான் அமைதியாவே இன்னைக்கு
வரைக்கு கெடக்கேன். அதுதான் வித்யாசம்”
என்று கூறியதை கேட்டு கிருபா விக்கித்து வண்டியை சக் என்று நிறுத்தினான்.
“என்னாச்சு
கிருபா” என்றார் திரும்பி அவனை
பார்த்த நீதிபதி.
“அய்யா...
சாமி... எனக்கு லேசா நெஞ்ச அடைக்குது,
கொஞ்சம் சோடா குடிச்சிட்டு வரவா” என்றவனை பார்த்து நீதிபதி
தாராளமாய் போ என்பதுபோல கைஜாடை காட்டிவிட்டு இருக்கையில் இலகுவாக சாய்ந்து
அமர்ந்தார். பழைய போட்டோ நினைவுகள் வந்துபோயின மனக்கண்ணில். எனக்கு வந்த போட்டோவை
யாரு பிடிச்சிருப்பா என எண்ணவோட்டம் இருந்தது.
கிருபா ஓடி கடையை அடைந்தான். “ஒரு சோடா குடுப்பா” என்றவன் வாங்கி மடக் மடக் என குடித்து
சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, போனை எடுத்து அவசரமாக டயல் செய்தான்,
“அம்மா..
பொண்ணு போட்டோ அனுப்பிருந்திங்கல்ல, நாகூட ஓகே சொன்னேனே, அதெல்லாம் மறந்துடுங்க.
பொண்ண நேரில் பார்த்துட்டு முடிவு பண்ணிக்கலாம்” என்று கூறிவிட்டு கால்
கட்செய்துவிட்டு மீதமுள்ள சோடாவை நிம்மதியாய் குடிக்கலானான்.!
...............................
மு.பூங்குன்றன்
கருத்துகள்
கருத்துரையிடுக